மஸ்கோத் அல்வா!
தேவையான பொருட்கள்:
- 1 சுண்டு கோதுமை மா
- 4 சுண்டு தேங்காய்ப்பால்
- 1 ½ சுண்டு சீனி
- 35 கிராம் கஜூ
- ½ மே.க ஏலக்காய்த்தூள்
- தண்ணீர்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மா மற்றும் தண்ணீர் சேர்த்து, பூரி மா பதத்திற்கு குழைக்கவும். அந்த மாக்கலவை மூழ்கின்ற அளவு தண்ணீர் விட்டு, குறைந்தது 30 நிமிங்கள் ஊற விடவும்.
- அதன் பின்பு நன்றாக பிசைந்து பால் எடுக்கவும். மாக்கலவையிலிருந்து பால் வெளிவந்ததும், இறப்பர் மாதிரி மாவில் இருந்து வரும் கலவையில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, அதை வீசி விடவும். எடுத்த பாலை வடிகட்டி விடவும். குறைந்தது 5 மணித்தியாலங்கள் அல்லது ஒரு இரவு முழுவதும் பாலை படிய விடவும்.
- மறு நாள் கோதுமைப்பால் கீழேயும் தெளிந்த நீர் மேலேயும் இருக்கும். மேலே உள்ள நீரை ஊற்றி விடவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் ½ சுண்டு சீனியை போட்டு, மிதமான வெப்பத்தில் உருக விடவும். சீனி உருகி கரமலாக வந்ததும், தேங்காய்ப்பாலை விடவும். அடுத்து மீதி சீனியை சேர்க்கவும். தேங்காய்ப்பாலை விட்டதும், கரமல் இறுகும், பின்பு இளகத் தொடங்கும். கரமல் முழுவதும் இளகி தேங்காயப்பாலுடன் சேர்ந்ததும், கோதுமைப்பாலை நன்றாகக் கலக்கி, தேங்காய்ப்பால் கலவையினுல் விட்டுக்கொண்டு கை விடாமல் கிண்டவும்.
- அண்ணளவாக 30 நிமிடங்களின் பின்பு மாக்கலவை இறுகி, எண்ணை வெளி வரும் போது, கஜூ ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிண்டவும்.
- அத்துடன் மாக்கலவை எண்ணையில் பொரிகிற மாதிரி வரும் வரை மஸ்கோத் அல்வாவை கிண்டவும். மஸ்கோத் அல்வாவை கரண்டியால் தூக்கி விடும் போது முறிந்து விழும், அது தான் சரியான பதம்.
- எண்ணெய் பூசிய தட்டில் விட்டு, நன்றாக அழுத்தி சமப்படுத்தி விடவும். ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
சுவையான மஸ்கோத் அல்வா தயார்!
குறிப்பு:
- 1 ம் தேங்காய்ப்பால் 2 சுண்டும் மற்றும் 2 ம் தேங்காய்ப்பால் 2 சுண்டு உபயோகிக்கவும் அல்லது ரின் தேங்காய்பால் என்றால் 3 சுண்டும் தேங்காய்ப்பாலும் 1 சுண்டு தண்ணீரையும் உபயோகிக்கவும்.
- விரும்பினால் ½ பங்கு சீனியில் கராமல் செய்யலாம்.
- கஜூ கூடுதலாக விரும்புகின்றவர்கள் 50 கிராம் கஜூ சேர்க்கவும்.
- சுண்டு அளவில் செய்யாவிட்டால், மஸ்கோத் அல்வா அடிப்படை அளவு: 1 பங்கு மா என்றால் 1 ½ பங்கு சீனி 4 பங்கு தேங்காய்ப்பால்.
Comments
Post a Comment