மட்டி குழம்பு!
தேவையான பொருட்கள்:
- ½ கிலோ மட்டி
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 ரம்பை இலை
- 1 துண்டு கறுவாப்பட்டை
- 3 ஏலக்காய்
- 5 கராம்பு
- ½ தே.கரண்டி கடுகு
- 1 தே. கரண்டி சின்னச்சீரகம்
- 1 தே.கரண்டி பெருஞ்சீரகம்
- ½ மே. கரண்டி மிளகு
- 2 மே.கரண்டி இஞ்சி உள்ளி விழுது
- 3 மே.கரண்டி கறித்தூள் / குழம்பு மிளகாய்த்தூள்
- 1 தே.கரண்டி மஞ்சள்
- தண்ணீர்
- உப்பு
- எண்ணை
- தேசிப்புளி
- உருளைக்கிழங்கு
- தேங்காய்ப்பால்
- கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான தீயில் சூடாக்கவும். அதில் கடுகு போட்டு, கடுகு வெடிக்கத் தொடங்கியதும், அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சின்னச்சீரகம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அதில் மட்டி, இஞ்சி உள்ளி விழுது, மஞ்சள், ரம்பைஇலை, உப்பு, தக்காளி மற்றும் கறுவா, ஏலக்காய், கராம்பை தட்டி சேர்த்து, நன்கு கலந்து மூடி அவிய விடவும். மட்டி தண்ணீர் விட்டு அவியும். தண்ணீர் முழுவதும் வற்றியதும், கறித்தூள் / குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதன் பின்பு மட்டி அளவிற்கு தண்ணீர் விட்டு, உப்பு சுவை பார்த்து, குழம்பை மூடி அவிய விடவும். ஒரு கொதி வந்ததும், உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து மூடி அவிய விடவும். உருளைக்கிழங்கு அவிந்து, குழம்பிலிருந்து எண்ணை வெளிவரும் பொழுது பெருஞ்சீரகம் மற்றும் மிளகை ஒன்று பாதியாக இடித்து சேர்த்து, ஒரு கொதி வந்ததும், குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி விடவும். விரும்பினால் இறைச்சிசரக்கு தூள், தாளிதம் மற்றும் தேசிப்புளி சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
சுவையான மட்டி குழம்பு தயார்!
குறிப்பு:
- உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
- ரம்மைஇலைக்கு பதிலாக பிரியாணிஇலை உபயோகிக்கலாம். கறுவா, ஏலக்காய், கராம்பு சேர்க்காவிட்டால் கரம் மசாலா / இறைச்சிச்சரக்குத்தூள் சேர்க்கவும்.
- தாளிதம் இறுதியாக சேர்க்க விரும்பினால் வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அதிலிருந்து சிறிது எடுத்து வைத்து பின்பு இறுதியாக சேர்க்கவும். அல்லது தாளிதம் செய்தது இறுதியாக சேர்க்கவும்.
Comments
Post a Comment