தொதல்!
தேவையான பொருட்கள்:
- 1 சுண்டு சிவப்புபச்சை அரிசி
- 3 தேங்காய்ப்பால் ரின் (400 மி.லீ ரின் x 3)
- ½ லீட்டர் தண்ணீர்
- ½ கிலோ சர்க்கரை*
- ½ கிலோ சீனி*
- 1 மே.க சவ்வரிசி*
- 1 மே.க வறுத்த பயறு*
- 1 மே.க ஏலக்காய்த்தூள்*
- 75 கிராம் கயூ
செய்முறை:
- அரிசியை கழுவி, குறைந்தது 2 மணித்தியாலங்கள் ஊற விடவும். ஊறிய அரிசியை, வார விடவும். அடுத்ததாக அரிசியை உரலில் இடித்தோ அல்லது மிக்சியில் அடித்து, குறுனல் இல்லாமல் அரித்து எடுத்து வைக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சிவப்புபச்சை அரிசிமா, சர்க்கரை, சீனி, தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைக்கவும்.
- மிதமான தீயில், அந்த கலவையை எடுத்து அடுப்பில் வைத்து, அகப்பையால் நன்றாக கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- அண்ணளவாக 30 நிமிடங்களின் பின்பு தொதல் கலவை இறுகி வரத்தொடங்கும், மற்றும் 45 நிமிடங்களின் பின்பு எண்ணெயும் கசியத் தொடங்கும். அப்பொழுது வறுத்து வைத்துள்ள சவ்வரிசி, பயறு மற்றும் கயூ சேர்த்து, நன்றாக கிண்டவும். அடுத்ததாக ஏலக்காய் தூள் சேர்த்து தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- அண்ணளவாக 90 நிமிடங்களின் பின்பு, எண்ணை வெளியேறி, தொதல் இறுகி வரும்.
- இறுதியாக ஒரு பெரிய தட்டில் போட்டு, சமப்படுத்தி வைத்து கொள்ளுங்கள்.
- தொதல் ஆறியதும் அல்லது அடுத்த நாள் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
சுவையான தொதல் தயார்!
குறிப்பு*:
- விரும்பினால் ¾ கிலோ சர்க்கரை மற்றும் ¼ கிலோ சீனி சேர்த்தும் செய்யலாம்.
- கட்டியான தேங்காய்ப்பால் ரின் என்றால், 2 ½ ரின் போதுமானது (1 லீட்டர்).
- சவ்வரிசியை வறுக்காமலும் சேர்க்கலாம்.
- உங்கள் சுவைக்கேற்ப கயூ, சவ்வரிசி, பயறு மற்றும் ஏலக்காய்த்தூளின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
- இந்த அளவில் செய்தால் கிட்டத்தட்ட 2 ¼ கிலோ தொதல் கிடைக்கும்.
Comments
Post a Comment